மஹிந்த : சஜித் கடும் போட்டியில் மஹிந்தவுக்கு பிரதமர் பதவி – TNA இரண்டாக பிரிகிறது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் பிரதமராகக் கூடிய வாய்ப்பு அதிகளவில் மஹிந்த ராஜபக்ஷவுக்கே உள்ளது என்றும் அவர் அதிருப்தி தராத மக்களுக்கான ஆட்சியை முன்னெடுப்பாரென இந்தியாவின் பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாஸன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் கணிப்பீடு தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
“.. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது ஜாதக கணிப்பீடுகளின்படி இம்முறை பொதுத்தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பிரதமாராவார். எனது கணிப்பின்படி மஹிந்த ராஜபக்ஷ 120 – 155 வரையிலான தொகுதிகளை உறுதியாக வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராவார்.
இம்முறை தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ, சஜித் பிரேமதாச, இரா.சம்பந்தன், ரணில் விக்கிரமசிங்க மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகிய ஐவரிடையே போட்டி நிலவுகின்றது.
இதில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் கடும் போட்டி நிலவும் என்றும் அதில் மஹிந்த ராஜபக்ஷவுக்கே வெற்றி வெறும் வாய்ப்பு காணப்படுகிறது. சஜித் பிரேமதாசவுக்கு சிறிய இடைவெளியில் வெற்றிக்கு நெருங்கும் வேளையில் அது தவறிப்போகும் வாய்ப்புள்ளது.
மேலும் ரணில் விக்கிரமசிங்க அதிகபட்சமாக 15 – 23 தொகுதிகளையே கைப்பற்றி மூன்றாம் இடத்தைப் பெறுவார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தான் இத்தனை தொகுதிகளை கைப்பற்றுவேனென ஒரு கணக்கு வைத்திருப்பார் அதன்படியே அவர்கள் 13 – 17 தொகுதிகளை கைப்பற்றக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
அவ்வாறு இருக்க, சம்பந்தனின் கருத்தின் காரணமாக கூட்டமைப்பில் பிளவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் மற்றும் இரு கட்சித்தலைமைகள் உருவாகக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது..” என அவரது ஜாதகக் கணிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.