நவம்பர் மாதம் மனித பயன்பாட்டுக்கு வரும் சீனாவின் தடுப்பூசி

நவம்பர் மாதம் மனித பயன்பாட்டுக்கு வரும் சீனாவின் தடுப்பூசி

(ஃபாஸ்ட் நியூஸ் |  சீனா) – சீனாவில் கொவிட் -19 (கொரோனா) தடுப்பு ஊசி இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதாகவும், எதிர்வரும் நவம்பர் மாதம் மனித பயன்பாட்டுக்கு வரும் எனவும் அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

சீனாவில் நான்கு கொரோனா தடுப்பு மருந்துகள் தயாராகி வருகின்றன. இவற்றில் ஏற்கனவே மூன்று மருந்துகள் ஆய்வுகளுக்கு இடையே பல்வேறு கட்டங்களில் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு தடுப்பு ஊசி அந்நாட்டின் இராணுவ வீரர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த மனித பரிசோதனை சீனாவில் கடந்த ஜூன் மாதத்தில் துவங்கிவிட்டது.

இது குறித்து அந்நாட்டின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்து இருக்கும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய தலைவர் கைசென் வு, ”மூன்றாம் கட்ட மனித பரிசோதனை நடந்து வருகிறது. வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் மனித பயன்பாட்டுக்கு வந்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பு மருந்தை தானும் கடந்த ஏப்ரல் மாதம் செலுத்திக் கொண்டதாகவும், அதன்பின்னர் தனக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்று கைசென் தெரிவித்துள்ளார்.

சீனாவின் நேஷனல் பார்மாசூட்டிகல் குரூப் (சைனோபார்ம்), அமெரிக்க பங்குச் சந்தையில் இடம் பெற்று இருக்கும் சைனோவாக் பயோடெக் எஸ்விஏ.ஓ ஆகியவை இணைந்து மூன்று தடுப்பு மருத்துகளை தயாரித்து வருகின்றன. நான்காவது தடுப்பு மருந்தை கேன்சைனோ பயாலஜிக்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த தடுப்பு மருந்துதான் கடந்த ஜூன் மாதம் இராணுவத்தினருக்கு செலுத்தப்பட்டது.