மூன்றாவது தடவையும் புகைத்தலுக்கு எதிரான சர்வதேச தின விருது …

மூன்றாவது தடவையும் புகைத்தலுக்கு எதிரான சர்வதேச தின விருது …

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் விசேட விருதான புகைத்தலுக்கு எதிரான சர்வதேச தின விருது மூன்றாவது முறையாகவும் இலங்கை புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகார சபைக்குக் கிடைத்துள்ளது.

மதுபானம் மற்றும் புகையிலைப் பாவனையைக் குறைப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை கௌரவித்து இந்த விருது ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று(23) இடம்பெற்ற நிகழ்வில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கிழக்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் கலாநிதி பூனம் கெற்றாபல் சிங்கினால் இவ்விருது உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி இவ்விருதை புகையிலை, மதுபானம் தொடர்பான அதிகார சபையின் தலைவர் பாலித்த அபேகோனிடம் கையளித்தார்.

ஒவ்வொரு வருடமும் உலக சுகாதார தாபனத்தினால் உலக சுகாதார தாபனத்தின் ஆறு வலயங்களினூடாக மதுபானம் மற்றும் புகையிலை ஒழிப்புக்கு நடவடிக்கை எடுத்துவரும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைப் பாராட்டி இவ்விருது வழங்கப்படுகிறது.

மதுபானம் மற்றும் புகையிலைப் பாவனையைப் படிப்படியாகக் கட்டுப்படுத்தி, இவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து இலங்கையர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களுக்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சுகாதார அமைச்சராக இருந்த போது 2014 ஆம் ஆண்டு, முதல் முறையாக இவ்விருது வழங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தனவுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

மதுபானம் மற்றும் புகையிலைப் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பில் இலங்கை இன்று உலகில் முன்மாதிரியான நாடாகத் திகழ்வதாக இந்த நிகழ்வில் உரையாற்றிய கிழக்காசிய பிராந்தியப் பணிப்பாளர் கலாநிதி பூனம் கெற்றாபல் சிங் தெரிவித்தார்.