கஞ்சா பயன்பாடு – பாராளுமன்றம் ஒப்புதல்…

கஞ்சா பயன்பாடு – பாராளுமன்றம் ஒப்புதல்…

கனடாவில் கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் அனுமதி அளிக்க வகை செய்யும் சட்டத்திற்கு பாராளுமன்றம் இறுதி ஒப்புதலை வழங்கி உள்ளது.

ஜி7 நாடுகளில் கஞ்சாவை உற்சாக பயன்பாடுக்கு அனுமதிக்கும் முதல் நாடு என்ற பெயரை கனடா பெற்றுள்ளது.

கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் மருத்துவ காரணங்களுக்காக கஞ்சாவை பயன்படுத்துவது கனடாவில் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்ததாக தொடர்ந்து புகார் வந்தது. அத்துடன், கட்டுப்பாடுகளுடன் கஞ்சாவை பயன்படுத்த அனுமதிக்கலாம் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்த நிலையில் கனடா நாட்டில் முன்னதாக, கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கிப் பயன்படுத்தவும் சட்டப்பூர்வ அனுமதியளிக்கும் மசோதா, கனடா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதன்பின்னர் மசோதாவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, மீண்டும் பாராளுமன்ற கீழவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், 52 எம்.பி.க்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவை எதிர்த்து 29 எம்.பி.க்கள் வாக்களித்தனர். அரசின் ஒப்புதல் கிடைத்ததும், செப்டம்பர் மாதம் முதல் இந்த சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.