இராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடை…

இராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடை…

(Fast News – Russia) ரஷ்யாவில் இராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடைவிதிக்கும் மசோதா பாராளுமன்ற கீழ் சபையில் தாக்கல் செய்யப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இராணுவம் குறித்த இரகசிய தகவல்கள் பொதுவெளியில் கசிவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதையடுத்து இராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடைவிதிக்க வேண்டுமென இராணுவ அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து குறித்த அந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 450 உறுப்பினர்களில் 400-க்கும் மேற்பட்டோர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனவே மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.

எனினும் இந்த மசோதா பாராளுமன்ற மேல்சபையிலும், கூட்டமைப்பு கவுன்சிலிலும் நிறைவேற வேண்டும். அதனை தொடர்ந்து அதிபர் புதின் அந்த மசோதாவில் கையெழுத்திட்டு பின்னர் சட்டமாக இயற்றப்பட்டு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த சட்டம் அமலுக்கு வந்தால் கேமரா, இணையதளம் உள்ளிட்ட வசதிகளை கொண்ட ‘ஸ்மார்ட்போன்’ மட்டும் இன்றி ‘லேப்-டாப்’ ‘டேப்லட்’ உள்ளிட்டவற்றையும் பயன்படுத்த இராணுவ வீரர்களுக்கு தடைவிதிக்கப்படும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.