கூட்டுறவு துறையில் நிலைபேண் அபிவிருத்தி – வியட்னாமில் மாநாடு ஆரம்பம்…

கூட்டுறவு துறையில் நிலைபேண் அபிவிருத்தி – வியட்னாமில் மாநாடு ஆரம்பம்…

(FASTNEWS|COLOMBO) கூட்டுறவுத்துறையில் நிலை பேண் அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கான சட்ட வரைபுகளையும் புதிய கொள்கைகளையும் உருவாக்கும் நோக்கில் சர்வதேச கூட்டுறவு அமைப்பு (ICA) மற்றும் ஆசிய -பசுபிக் பிராந்திய கூட்டுறவு அமைப்பு (AP) ஆகியன இணைந்து வியட்நாமில் மாநாடொன்றை நடத்துகின்றது. கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள இந்த மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை வியட்நாம் ஹோ சி மின்ஹ் சிட்டியில் இடம்பெற்று வருகின்றது.

இந்த மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாக இளைஞர் வலுவூட்டல் அமைப்பின் தலைவர் முஹம்மட் ரியாஸ் பங்கேற்கின்றார். இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள சர்வதேச கூட்டுறவு அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ப்ருனோ ரோலன்சுடன், இலங்கை கூட்டுறவு வளர்ச்சி தொடர்பிலும் எதிர் கொள்ளும் சவால்கள் மற்றும் சர்வதேச கூட்டுறவு துறைக்கு ஏற்ற வகையில் இலங்கைக்கூட்டுறவு துறையை முன்னேற்றுவது குறித்தும் சினேக பூர்வமான கலந்துரையாடல் ஒன்றை முஹம்மட் ரியாஸ் நடத்தினார்.

அத்துடன் இலங்கையில் எதிர் வரும் ஜூலை மாதம் இடம்பெறவுள்ள சர்வதேச கூட்டுறவு இளைஞர் மாநாடு தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த மாநாட்டில் இலங்கை சார்பில் பங்கேற்கவுள்ள சுமார் 50 இளைஞர் யுவதிகளுக்கான அனுமதியையும் ஆசிய – பசுபிக் பிராந்தியதியதிற்கான பணிப்பாளர் பாலு ஐயரிடமிருந்து இளைஞர் வலுவூட்டல் அமைப்பின் தலைவர் முஹம்மட் ரியாஸ் பெற்றுக்கொண்டார். அதுமாத்திரமன்றி இலங்கை இளைஞர் மாநாடு கூட்டுறவு துறையில் மற்றுமொரு வளர்ச்சிக்கு வித்திடுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.