யாழ்.முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் அவர்களின் ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது எனவும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டும் ஒருவரை மற்றவர் குறை கூறிக்கொண்டிருந்தால் இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது சிரமமாகவே இருக்கும் என்றும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் தமது பிரதேசத்திற்கு மீள் குடியேறிச் சென்றுள்ள யாழ் முஸ்லிம்களுடனான கலந்துரையாடல் யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெற்ற போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன், அமைச்சரின் யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான பிரதிநிதி மௌலவி சுபியான் உட்பட முஸ்லிம் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,
யாழ்ப்பாணத்தில் நான் அரசியல் நடத்தவரவில்லை. மீள்குடியேற்றத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் எண்ணமும் எனக்கில்லை. நானும் உங்களைப் போன்ற அகதியே யாழ் முஸ்லிம்கள் படுகின்ற அவதிகளை பலர் சொல்லக்கேட்டிருக்கின்றேன்.
அடிப்படை வசதிகளின்றி நீங்கள் படுகின்ற அவஸ்தைகளை நான் நேரில் கண்டேன், கச்சேரியில் நடந்த உயர்மட்ட மாநாட்டில் இவற்றை சுட்டிக்காட்டினேன் என குறிப்பிட்டார்.
இதேவேளை, ஒத்துழைப்பு வழங்குவதாக அவர்கள் வாக்குறுதியளித்துள்ளனர்.
நீங்கள் நியாயமான கோரிக்கைகளை கேளுங்கள் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் ஒன்றினையும் இதன்போது விடுத்துள்ளார்.
(rizmira)