பாராளுமன்ற கலைப்பு வர்த்தமானிக்கு எதிரான மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை – சட்டமா அதிபர்..

ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானதெனத் தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீதான மனுவை விசாரணை செய்ய உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையென சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய இன்று(05) உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

குறித்த மனு இன்று இரண்டாவது நாளாகவும் 7 நீதியரசர்கள் அடங்கிய குழாமால் விசாரணைக்கு எடுத்துக் ​கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மனுதாரர் தரப்பால் முன் வைக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மூலம் ஜனாதிபதி அரசமைப்பை மீறியுள்ளதாகக் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி அரசமைப்பை மீறி செயற்படும் சந்தர்ப்பத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, அரசமைப்பின் 38 (2) உறுப்புரையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த உறுப்புரைக்கமைய, ஜனாதிபதி அரசமைப்பை மீறி செயற்படும் சந்தர்ப்பத்தில் அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் குற்றப்பிரேரணையை சமர்ப்பித்து அதன் மூலம் ஜனாதிபதி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்ய உயர்நீதிமன்றுக்கு அனுப்ப வேண்டும் என்றும் சட்டமா அதிபர் இன்று தெரிவித்துள்ளார்.

இதன் பின்னரே உயர்நீதிமன்றம் ஊடாக ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்யபட்டு, அதன் இறுதி அறிக்கை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமென சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.