அடிப்படை சமயவாத கற்பிதங்களால் தான் பயங்கரவாதம் உருவாகிறது – ஜனாதிபதி

(FASTNEWS | COLOMBO) – அரச வெசாக் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கேற்புடன் இன்று(18) காலி, ஹிக்கடுவ, தொடகமுவ புராண ரத்பத் ரஜமகா விஹாரையில் ஆரம்பமானது.

வழிபாடுகளுக்கு பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;

“.. அடிப்படை சமயவாத கற்பிதங்களால் தான் பயங்கரவாதம் உருப்பெறுகின்றது. சர்வதேசப் பயங்கரவாதம் , சர்வதேச போதைப் பொருள் கடத்தல் , சர்வதேச ஆயுத வர்த்தகம் என்பன அனைத்தும் இந்த அடிப்படை சமயவாதத்தினாலேயே முன்னெடுக்கப்படுகின்றன.

அதனால் தான் இந்த விடயத்தில் என் மீதும் அரசாங்கத்தின் மீதும் எவ்வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், மனசாட்சிக்கு அமைய சரியான விடயங்களை முன்னெடுப்போம். அனைத்து பகுதிகளிலும் பொய்ப்பிரசாரங்கள் வேகமாகப் பரப்பப்படுகின்றன. உண்மை மெதுவாகவே பயணிக்கின்றது.

எவ்வாறாயினும், இந்த நாட்டில் இருந்து பயங்கரவாதிகளை இல்லாதொழிக்க விசேடமாக கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு பின்னர் எவ்வித தாக்குதல்களும் இடம்பெறவிடாமல் அரசாங்கம் என்ற வகையில் உரிய நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.

அதற்கான பெறுபேறுகள் உண்டு. அதனால் தான் 21 ஆம் திகதிக்கு பின்னர் எவ்வித தாக்குதல்களையும் முன்னெடுக்க பயங்கரவாதிகளால் முடியாமற்போனது. எமது புலனாய்வுப் பிரிவினருடன் முப்படையினர் மற்றும் பொலிஸார் தமது அர்ப்பணிப்பை வௌிப்படுத்தியுள்ளனர்…” எனத் தெரிவித்திருந்தார்.