உலகம் முழுவதும் அணு ஆயுத பரவலுக்கு எதிராக குரல் எழுப்பிவரும் வேலையில் ரஷியா தொடர்ந்து அணு ஆயுதங்களை தரம் உயர்த்தும் பணியில் ஈடுபடும் என அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
‘உலக ஒழுங்கு’ என்ற தலைப்பில் ரஷிய அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பிய ஆவணப்படத்தில் தனது கருத்தை பதிவு செய்திருக்கும் புதின், ‘அணு ஆயுதங்களை வைத்திருக்கும் முக்கியமான நாடு என்ற முறையில் ஒரு வரைமுறைக்கு உட்பட்டு அணு ஆயுதங்களை தரம் உயர்த்தும் பணிகள் எப்போதும்போல் தொடர்ந்தும் நடைபெறும்.
அணு குண்டுகள், கண்டம் விட்டு கண்டம் தாவும் அணு ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் அணு ஆயுதங்கள் போன்றவை எங்களது அணு பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளில் ஒன்றாகும். இவற்றை வைத்து யாரையும் நாங்கள் அச்சுறுத்தியது கிடையாது, அச்சுறுத்தவும் மாட்டோம். ஆனால், எங்களது ராணுவ சித்தாந்தம் அணு ஆயுதங்களுக்கென தனி இடமும், பங்களிப்பும் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது’ என குறிப்பிட்டார்.