அதிகளவான ஹோர்ன் சத்தங்களை எழுப்பும் வாகனங்கள் சுற்றிவளைக்கப்படும்

வாகனங்களில் எழுப்பப்படும் அதிகளவான ஹோர்ன் சத்தங்களை குறைக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை கோரியுள்ளது.

இதற்கமைய வாகனங்களில் இருந்து எழுப்பப்படும் ஹோர்ன் சத்தத்தினால் சுற்றுச்சூழல் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவிக்கையில்,

இதனைத் தடுப்பதற்காக மோட்டார் வாகன திணைக்களம், இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு இவ்வாறு அதிக சத்தத்தை எழுப்பும் வாகனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கான விஷேட நடவடிக்கை ஒன்று இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன், இவ்வாறான நடவடிக்கை ஒன்று கடந்த வருடம் நவம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன் தொடர்ச்சியே இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், மாலபே பிரதேசத்தின் சந்திரிக்கா குமாரதுங்க மாவத்தையில் இன்று காலை 9.30 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிவரை இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும், குறித்த நேரத்தில் வாகன சாரதிகளையும், பொதுமக்களையும் தெளிவுபடுத்தும் நிகழ்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.