அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் விலை அதிகரிக்கப்படுமாயின், விற்பனை செய்ய மாட்டோம்…

அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் விலை அதிகரிக்கப்படுமாயின், 2017ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அதிர்ஷ்ட இலாபச்சீட்டை விற்பனை செய்யமாட்டோம் என்று, அதிர்ஷ்ட இலாபச்சீட்டு விற்பனைப் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.

“அதிர்ஷ்ட இலாபச்சீட்டு ஒன்றின் விலையை 30 ரூபாய் வரையிலும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது, நாட்டிலிருந்து அதிர்ஷ்ட இலாபச்சீட்டுச் சந்தையை இல்லாதொழிக்கும் செயற்பாடாகும். ஆகவே, அந்தத் தீர்மானத்தை இரத்துச் செய்யுங்கள்” என, அப்பிரதிநிகள் சங்கம் எடுத்துரைத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் குருநாகல் மாவட்ட, அதிர்ஷ்ட இலாபச்சீட்டு விற்பனைப் பிரதிநிதிகள் நலன்புரிச் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

“அதிர்ஷ்ட இலாபச்சீட்டொன்றின் விலையை 10 ரூபாயினால் அதிகரிப்பதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தைக் கைவிடுமாறு, அரசாங்கத்திடம் நாம் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

அப்படி இல்லாமல், அதிர்ஷ்ட இலாபச்சீட்டினை வேறு நபர்களைக் கொண்டு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாயின், அதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியவற்றுக்கு அதிகாரிகளை நியமித்து, ஒருவருடம் கடப்பதற்கு முன்னரே, அந்தத்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எவ்விதமான அனுபவங்களும் இல்லாதவர்களை நியமிக்கின்ற போது, இவ்வாறான நிலைமையே ஏற்படும்” என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.