அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு மேலும் இறக்குமதி தடை!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

எதிர்காலத்தில் அந்நிய செலாவணி நெருக்கடி மேலும் மோசமடையும் என்றும், எனவே அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மட்டுப்படுத்துமாறும் இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சுக்கு அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு மீதான தாக்கம் மோசமாகும் என்பதால் இறக்குமதி கட்டுப்பாடுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய வங்கி கூறியுள்ளது.

எரிபொருள், மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் தேவைப்படுவதால் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானது என மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

அதற்கமைய 2,500 க்கும் மேற்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களின் மூன்று பட்டியல்களை மத்திய வங்கி நிதி அமைச்சுக்கு அனுப்பியுள்ளது.

மேலும் திறந்த கணக்கு முறையின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் பொருட்களை விற்பனை செய்த பின்னர் பணம் செலுத்துவதற்கும் தற்காலிகமாக தடை விதிக்குமாறும் மத்திய வங்கி நிதியமைச்சுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.