அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கின்ற மாவட்டங்களில் வாக்காளர் பெயர் பதிவு இடாப்பு மீள் திருத்தம் செய்யும் நடவடிக்கைக்கான காலத்தை மேலும் நீடிப்பதற்கு தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
வாக்காளர் பெயர் பதிவு இடாப்பின் மீள் திருத்தத்திற்கு தேவையான படிவங்களை நிரப்புவதற்காக வழங்கப்பட்டிருந்த காலம் ஜூன் மாதம் 07ம் திகதியுடன் நிறைவடைய இருந்த போதிலும் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கின்ற மாவட்டங்களில் குறித்த இந்தக் காலம் நீடிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
இதேவேளை அனர்த்த நிலமை காரணமாக வீடுகளை இழந்தவர்கள் இடையூறுகள் இன்றி வாக்காளர் பெயர்ப்பதிவு படிவத்தை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.