அன்று அமைதி காத்தவர் இன்று பொங்கி எழுவது ஏன்?

பிரித்தானியாவிற்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் கிறிஸ்நோனிஸ் தாக்கப்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி அமைதியாகத் தானே இருந்தார் என திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் மையத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அங்கு கருத்துரைத்த அவர்,

மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் இப்றாஹீம் அன்ஸார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு மாத்திரம் ஏன் மகிந்த சுடச் சுடச் கண்டனம் தெரிவித்தார்?

ஆனால், அவரது ஆட்சி காலத்தில் பிரித்தானியாவிற்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் கிறிஸ்நோனிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன மூலம் தாக்கப்பட்டமைக்கு ஏன் அமைதியாக இருந்தார் என மகிந்த சமரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை கிறிஸ்நோனிஸ் தாக்கப்பட்டமைக்கு தீர்வு அவரது இராஜினாமா தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ஆட்சி காலத்தில் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராக சஜின் இருந்தார், மகிந்தவுடன் நட்புறவை பேணி வந்தமையினால் அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டார் என்றும் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.