நல்லாட்சி அரசாங்கத்துக்கு தினமும் ஏச்சு கொடுத்துக்கிட்டு இருக்கிற, கடந்த அரசாங்கத்தோட ஆட்சிக் காலத்தில, ஊடகங்களோட தலைவர் என்ற நினைப்பில் ஒருத்தர் இருந்தாரு. மத்திய மாகாணத்தில போட்டியிட்டு, நாடாளுமன்றத்துக்குத் தெரிவான இவரு இப்போ, ஒன்றிணைஞ்ச எதிரணியில தான் இருக்காரு.
கொஞ்ச காலமாக, யானைக் கட்சியில இருந்த இவரு, பிறகு வெற்றிலைக் கட்சியோட சேர்ந்துக்கிட்டாரு. அரசாங்கத்தில பதவியொன்று கிடைக்காததாக தத்தளிச்சிக்கிட்டு இருக்கிற இவரு, கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாசம் 8ஆம் திகதி, அவர் இருந்த அரசாங்கம் கவிழ்ந்த பிறகு, திரும்பவும் யானைக் கூட்டத்தில சேர்ந்துக்க ரொம்ப ட்ரை பண்ணாராம். இருந்தாலும், அவரோட விண்ணப்பத்தை, யானைக் கட்சி ஏற்றுக்கொள்ள இல்லையாம்.
அதனால, எதிரணியோட சேர்ந்துக்கிட்டு, இந்த அரசாங்கத்துக்கு தலையிடியைக் கொடுத்துக்கிட்டு இருக்கிற இவரு, அண்மையில, மத்திய மாகாண அமைச்சர் ஒருத்தரோட அம்மா இறந்ததும், துக்கம் விசாரிக்கிறதுக்காக, அந்த அமைச்சர் வீட்டுக்குப் போனாராம். அப்போ அங்கிருந்த, அரசாங்கத்தோட தலைவர்கள் சிலர் கூட இவரு, பல மணித்தியாலங்களாக ரகசியம் பேசிக்கிட்டு இருந்தாராம். இந்த தகவல், கொழும்பு வரைக்கும் போயிருக்காம்.
கடந்த அரசாங்கத்தப்போ செஞ்சதாகக் கூறப்படுற பல தேவையில்லாத வேலைகளால, வழக்குகளிலயும் சிக்கிக்கிட்டு இருக்கிற அவரு, மீசையில மண் ஒட்டின பிறகு, அதைத் துடைச்சிக்கொள்ள வழி தேடிக்கிட்டு இருக்கிறதாக, துக்க வீட்டில இருந்த பலரும் பேசிக்கிட்டாங்களாம்.