அமெரிக்காவின் பாராளுமன்ற குழு முன் நேற்று ஆஜரான பேஸ்புக் தலைமை செயல் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் பேஸ்புக் நிறுவனத்தில் நடந்த தவறுகளுக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுமார் 5 கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு வழங்கியதாக பகிரங்கமான குற்றச்சாட்டு வெடித்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க பாராளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க பாராளுமன்றத்தின் குழுவின் முன்னர் பேஸ்புக் தலைமை செயல் இயக்குனர் மார்க் ஸக்கர்பெர்க் ஆஜராகி நேற்று பதில் அளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் கூறுகையில், கல்லூரி பருவத்தில் நான்தான் பேஸ்புக் சமூக வலைத்தளத்தை தொடங்கினேன். அதை நானேநடத்தி வருகிறேன். சுமார் 200 கோடி மக்கள் தங்களுக்கு மிகவும் வேண்டியவர்களுடன் தங்களது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை பேஸ்புக் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர்.
எங்களது பொறுப்புகளை நிறைவேற்றுவது தொடர்பாக அகன்ற தொலைநோக்குப் பார்வையை செலுத்தாமல் போனது பெரிய தவறு என்று கூறியுள்ளார்.
பேஸ்புக் நிறுவனத்தை நடத்தி வருவதால் அதில் நடக்கும் தவறுகளுக்கு நானே முழு பொறுப்பாளி என்பதால் மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்தார்.