விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கும், தனக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்தை இலங்கை அணியின் வீரரான திலகரட்ன டில்சான் மறுத்துள்ளார்.
மேலும் ஊடகங்களில் வெளிவந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவையே என குறிப்பிட்டுள்ள டில்சான் தானும், அமைச்சரும் சந்தித்து ஏறக்குறைய 4 மாதங்கள் ஆவதாகவும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக அமைச்சர் தயாசிறியை பங்களாதேசில் இடம்பெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் போதே சந்தித்ததாக டில்சான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனக்கும், விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்க மேற்கொள்ளப்படும் போலிப் பிரச்சாரம் என்றும் டில்சான் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தகவல்களை டில்சான் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை டில்சானின் கருத்துக்களை ஆமோதிக்கும் வகையில் நேற்றைய தினம் விளையாட்டுத்துறை அமைச்சரின் ஊடக செயலாளரும் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.