மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர்; 50,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில், இன்று(14) விடுதலை செய்யப்பட்டார்.
அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில், இன ரீதியான பேச்சுக்களை பேசியதாக கூறி, அம்பிட்டிய சுமணரத்தின தேரருக்கு எதிராக, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் மட்டக்களப்பு பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து தேரரை, இன்று(14) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்துக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பானை விடுத்திருந்தது.
இதற்கமைவாக, அம்பிட்டிய சுமணரத்தின தேரர், இன்று நீதிமன்றில் ஆஜரானார். இவர் தொடர்பிலான வழக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, இவரை 50,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணையில் நீதவான் விடுதலை செய்ததுடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 25 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
(நன்றி – எம்.எஸ்.எம்.நூர்தீன்)