மரண தண்டனையை நிறைவேற்றும் அரசின் திட்டத்தை மாற்றிக் கொள்ளுமாறும், இவ்வளவு காலமும் பின்பற்றி வந்த உயர்ந்த கௌரவமான வழி முறையைத் தொடர்ந்தும் கைக்கொள்ளுமாறும் சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மரண தண்டனை மனிதத் தன்மையற்ற ஒரு நடவடிக்கை எனவும், அது மாற்றப்பட முடியாத ஒரு தண்டனை எனவும் அவ்வமைப்பு விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.
இன்று உலகிலுள்ள 142 நாடுகளில் மரண தண்டனை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆசிய கண்டத்தில் மாத்திரம் 19 நாடுகள் எந்தவொரு குற்றத்துக்கும் மரண தண்டனையை நிறைவேற்றுவதைத் தவிர்த்துள்ளது. இன்னும் ஏழு நாடுகளில் சட்டமாகவுள்ளது, இருப்பினும், நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
கடந்த 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் பிரகாரம் 23 நாடுகளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருட காலத்தில் 11 நாடுகளே மரண தண்டனையை அமுல்படுத்தியுள்ளது. இது உலக நாடுகளின் அடிப்படையில் நோக்கும் போது 6% எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.