அரசியல்வாதிகள் கட்சி அரசியலுக்கு முக்கியத்துவமளிக்கக் கூடாது – மைத்திரி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நாட்டிலுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசியல்வாதிகள் கட்சி அரசியலுக்கு முக்கியத்துவமளிக்கக் கூடாது. குறுகிய காலத்திற்கு கட்சி அரசியலைப் புறந்தள்ளி , மக்களின் நலனுக்காக பாடுபட வேண்டும்.

மக்களின் நலனுக்கான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சிறந்த வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பு 15, ஸ்ரீ நந்தாராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு எமது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என நாம் ஜனாதிபதியிடம் தெரிவித்திருக்கின்றோம்.

அதே போன்று எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத விடயங்களுக்கு ஒருபோதும் ஒத்துழைப்பினை வழங்கப் போவதில்லை என்பதையும் ஜனாதிபதியிடம் தெளிவாக தெரிவித்திருக்கின்றோம்.

நாட்டிலுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசியல்வாதிகளின் கட்சிகளுக்கு முக்கியத்துவமளிக்கக் கூடாது. அரசியல்வாதிகளும் தமது கட்சி அரசியலை புறந்தள்ளி மக்களின் நலனுக்காக பாடுபட வேண்டும்.

நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் குற்றச் செயல்கள் , அவற்றால் ஏற்படும் மரணங்கள் , காணாமல் போதல் உள்ளிட்டவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது.

கடந்த மூன்று ஆண்டுகளாக காணப்பட்ட அரசாங்கத்தின் ஆட்சியில் இடம்பெற்றுள்ளவற்றை , மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டுவருவதற்கு நீண்ட காலம் செல்லும்.

2018 இல் நாடு காணப்பட்ட நிலைமைக்கு எவ்வாறு மீண்டும் செல்வது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனது ஆட்சி காலத்தில் என்மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் , இவ்வாறு எந்த பிரச்சினைகளும் காணப்படவில்லை.

அனைத்து நாடுகளுடனும் சிறந்த நட்புறவு பேணப்பட்டது. தற்போது பெரும்பாலான நட்பு நாடுகள் எம்மிலிருந்து விலகிச் சென்றுள்ளன. எனவே அரசியல்வாதிகள் , அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நாட்டு பிரஜைகள் என அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.