அரசியல் தலையீட்டினால் இலங்கை கிரிக்கெட் அழிவை நோக்கி – முரளி…

கிரிக்கெட் விளையாட்டானது அரசியல்வாதிகளினால் அழிவடைந்து வருவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;

“இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டுத் துறை தற்போது குழம்பின குட்டையை போல உள்ளது. அரசியல்வாதிகள் கிரிக்கெட்டை நிர்வகிக்க ஆரம்பித்துள்ளனர். கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் குறைந்த அறிவு அல்லது விழிப்புணர்வு இல்லாத அரசியல்வாதிகளால் கிரிக்கெட் அழிவடைகின்றது. கிரிக்கெட் என்பது நம்பிக்கையாகும். வீரர்கள் திறமையை வெளிப்படுத்த நம்பிக்கை ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும்.

இலங்கை நிற ஆடை அணியும் போது அவர்களுக்கு ஒரு கௌரவம் ஏற்பட வேண்டும். நான் ஒரு நாளில் சிறப்பான பந்து வீச்சாளராகவில்லை. 4 – 5 வருடங்களாக அர்ஜுன எனக்கு நம்பிக்கை கொடுத்தார். தற்போது துடுப்பாட்டக்காரர்கள் விளையாடும் போது, ஓட்டங்ளை குவிக்க வேண்டும் இல்லை என்றால் வெளியேற்றப்படுவீர்கள் என கூறுகின்றார்கள். பந்து வீச்சாளர்களுக்கும் அதனையே கூறுகின்றார்கள். அனைத்து பிரிவுகளிலும் இலங்கை வீரர்கள் 60% பரீட்சித்து பார்க்கப்பட்டுள்ளனர். அனைத்து சந்தர்ப்பங்களிலும் மேற்கொள்ளப்படும் மாற்றங்களில் எதிர்காலத்தில் விளையாட்டு மாற்றமடையும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.