அரச தரப்பு சாட்சியாளராக மாற வேண்டிய அவசியமில்லை – அவன்ட் கார்ட் நிறுவனத் தலைவர்

அவன்ட் கார்ட் நிறுவனத்தில் கடயைமாற்றிய 6,780 பேர் தொழில்களை இழந்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார்.

விசாரணைகளுக்காக புலனாய்வு பிரிவின் எதிரில் முன்னிலையாகி திரும்பிய போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நிஸ்ஸங்க பதிலளித்திருந்தார்.

பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தொழில்களை இழந்துள்ளனர். இவர்களை ஓய்வூதியத்தின் ஊடாக வாழ்க்கையை கொண்டு நடாத்துமாறு ராஜித சேனாரட்ன கூறுகின்றார்.

எனினும் தொழில்களை இழந்தவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.படைவீரர்களினால் ஒய்வூதியக் கொடுப்பனவைக் கொண்டு அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாது.

இந்த படைவீரர்கள் வீடு கட்ட கூடாதா? பிள்ளைகளை படிக்க வைக்கக் கூடாதா? வாகனம் ஒன்றை எடுக்கக் கூடாதா? 25,000 ரூபா ஒய்வூதியத்தைக் கொண்டு என்னதான் செய்வது? என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னும், நான் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனவே அரச தரப்பு சாட்சியாளராக மாற வேண்டிய அவசியமுமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.