உங்களுக்கு எம்மால் வழங்கப்பட்டு வரும் உதவிகளைக் கூட தடுக்கின்ற பணிகளில் இந்த வன்னி மாவட்ட அரிசயல்வாதிகள் ஈடுபடுகின்றனர் இவர்களும்,மக்களுக்கு பணியாற்றுவதில்லை பணிசெய்கின்றவர்களையும் விடுவதில்லை என வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார் நகரில் இடம் பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நாம் இந்த மக்களை சென்று சந்தித்து அவர்களது தேவைகள் தொடர்பில் கண்டறியும் பணியில் ஈடுபடுகின்ற போது அதற்கு எதிராக தேர்தல் அலுவலகத்திற்கும், பொலிஸ் இற்கும் சென்று முறைப்பாடுகளை செய்கின்றனர்.
இவர்கள் போலி முகங்களுடன் உங்களிடம் வந்து வாக்கு கேட்பார்கள் அவர்கள் எமக்கு தேவையா? என்பதை மக்களாகிய நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
நான் பொறுப்பெடுத்த அமைச்சுக்களின் மூலம் மக்களுக்கு எதனை செய்து கொடுக்க முடியுமோ அதனை செய்து கொடுத்து வருகின்றேன். மக்கள் எமக்கு வாக்களித்து எதிர்பார்த்தது அவை தான்,அதனை நாம் நிராகரித்து வெறுமேனே பாராளுமன்ற கதிரைகளை சுடாக்குவதற்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை அரசியல் வாதிகள் புரிந்து செயற்பட வேண்டும்.
இன்று இந்த தமிழ் மக்களுக்கும்,முஸ்லிம்களுக்கும் எதிரான விரோதிகளை அரசியலில் மீண்டும் கொண்டு வந்து அமரச் செய்யும் கொன்தராத்தினை முன்னாள் வன்னி எம்.பி.ஒருவர் பொறுப்பெடுத்துள்ளார் என்பதை அறிய முடிகின்றது.
இது தொடர்பில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். அற்ப,சொற்ப பணத்துக்காக நீங்கள் இந்த அரசியல்வாதிகளுக்கு துணை போய் விட வேண்டாம் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கேட்டுக்கொண்டார்.
இந்த தேர்தல் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 10 ஆசனங்களை பெறும்.
வன்னி, புத்தளம், குருநாகல், அநுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலையில் இந்த ஆசனங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் எமது சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளதாகவும் இதன் போது அமைச்சர் கூறினார்.



