ஆகஸ்ட் மாதத்துடன் கூட்டு எதிர்க்கட்சி இல்லை!

கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரையும் சிறையில் அடைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

விமல் வீரவங்சவின் வழக்கு நிமித்தம் கொழும்பு நீதிமன்றத்திற்கு இன்றைய தினம் வருகை தந்த போது ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

மேலும், இரண்டு வருடங்களாக ராஜபக்சர்களின் கடன்களைச் செலுத்துவதாக கூறிவந்த அரசு தற்போது தனது கடைசி யுக்தியை கடைப்பிடிக்கப்போகின்றது.

அந்த வகையில் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரையும் சிறையில் அடைப்பதற்காக திட்டம் தீட்டிக் கொண்டு வருகின்றது.

அமைச்சரவை அமைச்சர் ஒருவரும் “ஆகஸ்ட் மாத இறுதியில் பாதி கூட்டு எதிர்க்கட்சி இருக்காது அதன் உறுப்பினர்கள் சிறை செல்வார்கள்” என அண்மையில் கூறியிருந்தார்.

விமல் வீரவங்சவின் கைதும் அரசியல் பழிவாங்கல் ஒன்றே. இந்த விடயத்தில் நீதிமன்றத்தினை குறை கூறி பயன் இல்லை.

நிதி மோசடி விசாரணைப் பிரிவு முற்றிலும் அரசின் இலாபங்களையே செய்து கொண்டு வருகின்றது. என்பதனையும் அவதானிக்க முடியுமானதாக இருக்கின்றது எனவும் நாமல் குற்றம் சுமத்தினார்.