ஆங்கிலத்தை கற்காத முஸ்லிம் பெண்கள் நாடு கடத்தபடுவார்கள் – பிரதமர் டேவிட்

பிரித்தானியாவிலுள்ள முஸ்லிம் பெண்கள் உயர் தரத்திற்கு ஆங்கிலத்தில் புலமை பெறத் தவறுவார்களாயின் நாடு கடத்தப்படுவார்கள் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.

ஆங்கில அறிவு குறைந்தவர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் செய்திகளால் இலகுவாக பாதிக்கப்பட்டு அவர்கள் பால் கவரப்படுவதாக கருதுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அவரது பழைமைவாத அரசாங்கமானது தனிமைப்படுத்தப்பட்டுள்ள சமூகங்களைச் சேர்ந்த பெண்களை பிரித்தானிய அரசாங்கத்துடன் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையின் அங்கமாக அவர்களுக்கு மொழி அறிவூட்டுவதற்கு 26 மில்லியன் யூரோ பெறுமதியான திட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையிலேயே டேவிட் கமெரோனின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவிலுள்ள தமது வாழ்க்கைத் துணைகளுடன் இணைந்து கொள்ள வரும் குடியேற்றவாசிகள் பிரித்தானியா வருவதற்கு முன் ஆங்கிலத்தில் பேசத் தெரிந்திருப்பதை அந்நாட்டு குடிவரவு சட்டங்கள் ஏற்கனவே வலியுறுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவ்வாறு வந்தவர்களும் மேலும் மொழிப் பரீட்சைகளை எதிர்கொள்ளவுள்ளதாக டேவிட் கமெரோன் குறிப்பிட்டார்.

“நீங்கள் ஆங்கில உங்கள் அறிவை விருத்தி செய்யாவிடில் பிரித்தானியாவில் தங்கியிருப்பதில் உங்களுக்கு உத்தரவாதமில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

“ எமது நாட்டுக்கு வருபவர்களுக்கு அதற்கேற்ப கடப்பாடுகளும் உள்ளன” என அவர் கூறினார்.

டேவிட் கமெரோனது அரசாங்கத்தின் மதிப்பீடுகளின் பிரகாரம் அந்நாட்டில் 190,000 முஸ்லிம் பெண்கள் உள்ளனர். அவர்களில் 22 சதவீதமானவர்கள் ஆங்கிலத்தில் மிகக் குறைந்தளவில் உரையாற்றக்கூடியவர்களாகவோ அல்லது அறவே அந்த மொழியில் உரையாற்ற முடியாதவர்களாகவோ உள்ளனர்.

அத்துடன் பிரித்தானியாவின் மொத்த 53 மில்லியன் சனத் தொகையில் 2.7 மில்லியன் பேராக முஸ்லிம்கள் உள்ளனர்.