யாழில் செயற்படும் ஆவா குழுவில் இராணுவத்தினரை சேர்ந்தவர்கள் செயற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஆவா குழு உறுப்பினர்கள் என கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர் என தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தில் சேவை செய்து மீண்டும் சேவையில் இணைந்து கொள்ளாத இந்த அதிகாரி இந்த குழுவுடன் இணைந்து செயற்பட்டார் என்பதனை தான் ஏற்றுக் கொண்டுள்ளமையினால் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியதில் தவறில்லை.
ஆவா குழு வடக்கில் செயற்படும் மோட்டார் சைக்கிள் குழுவொன்றாகும். அவர்கள் சில காலங்களாக அந்தப்பகுதி மக்களை துன்புறுத்தி கப்பமாக பணம் பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதனால் தான் இது இராணுவத்தினரால் இயக்கப்படும் குழுவல்ல என நான் குறிப்பிட்டிருந்தேன்.
விசாரணை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் தான் இராணுவத்தில் இருந்து விலகியதாக குறித்த முன்னாள் இராணுவ உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தில் சேவையாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரிகள் இந்த குழுவுடன் செயற்பட்டிருக்கலாம்.
மேலும் சில இராணுவ முன்னாள் அதிகாரிகள் இந்த குழுவுடன் செயற்படுகின்றார்களா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.