இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்ற மூன்றாவது இருபதுக்கு -20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடர்ச்சியாக ஆறாவது இருபதுக்கு -20 தொடர் வெற்றியை நேற்று(08) பதிவு செய்துள்ளது.
பிரிஸ்டோல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி ஆடிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஜேசன் ரோய் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் வேகமாக ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.
பட்லர் 34 ஓட்டங்களையும், ஜேசன் ரோய் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 67 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுக்க, இடையில் அலெக்ஸ ஹேல்ஸ் 30 ஓட்டங்கள், பெயார்ஸ்டோவ் 25 ஓட்டங்கள் என குவிக்க, இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில், 9 விக்கட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இந்திய அணியின் பந்து வீச்சில் ஹர்திக் பாண்டியா 4 விக்கட்டுகளையும், சித்தார்த் கௌல் 2 விக்கட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் சதம் விளாச, இந்திய அணி 18.4 ஓவர்களில் வெற்றியிலக்கை இலகுவாக அடைந்தது.
அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் தனது மூன்றாவது சதத்தை பதிவுசெய்து, 56 பந்துகளுக்கு 100 ஓட்டங்களை விளாசினார். இவரின் துடுப்பாட்டத்துக்கு உறுதுணையாக இருந்த விராட் கோஹ்லி 43 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 14 பந்துகளுக்கு 33 ஓட்டங்களை விளாசி அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.
இங்கிலாந்து அணிசார்பில் வில்லி, ஜெக் போல் மற்றும் ஜோர்டன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுகளை வீழ்த்தினர்.