இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை (22) ஓல்ட் ட்ரஃபோர்ட்டில் ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
14 பேரை உள்ளடக்கியதாக விரிவாக்கப்பட்டுள்ள இக்குழாமில்; ஜேம்ஸ் அன்டர்சன், பென் ஸ்டோக்ஸ், அடில் ரஷீட் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதில், அன்டர்சனும் ஸ்டோக்ஸும் காயத்திலிருந்து குணமடைந்து குழாமில் இடம்பெற்றுள்ள நிலையில், ரஷீட்டின் உள்ளடக்கமே ஆச்சரியமாய் அமைந்துள்ளது.
எவ்வாறெனினும் ரஷீட் உள்ளடக்கப்பட்டுள்ளமையானது, அண்மைக்காலமாக மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்தி வரும் மொயின் அலிக்கு எச்சரிக்கை வழங்குவதாய் அமைந்துள்ளது.
மறுபக்கம், தனது முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளில் 18.66 சராசரியைக் கொண்டுள்ள ஜேம்ஸ் வின்ஸ் குழாமில் நீடிக்கிறார்.
இதேவேளை, முதலாவது போட்டிக்கான குழாமில் இடம்பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் டொபி றோலண்ட்-ஜோன்ஸ் மேற்படி குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை.
எனினும் முதலாவது போட்டியில் அறிமுத்தை மேற்கொண்ட ஜேக் போல், இடது தொடையில் இறுக்கமாக உணர்ந்தபோதும் குழாமில் இடம் பெற்றுள்ளதோடு, ஸ்டீவ் பின்னும் குழாமில் இடம்பெற்றுள்ளார்.