இந்தியாவிடமிருந்து வாங்கக் கூடாது – ஜனாதிபதி

இந்தியாவில் இருந்து, தொடரூந்து இயந்திரங்கள் மற்றும் பேரூந்து இயந்திரங்கள் போன்றவற்றை இந்தியாவிடம் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி கோரும் அமைச்சரவைப் பத்திரத்தை போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்திருந்தார்.

தொடரூந்து இயந்திரங்கள், பெட்டிகள் மற்றும் பேருந்து இயந்திரங்கள், மற்றும் உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்வதற்கு, அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட திட்டத்தை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தி வைத்துள்ளார்.

எனினும், இந்தியாவிடம் இருந்து தொடரூந்து இயந்திரங்கள், பெட்டிகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையில் உள்ள ஒரு பகுதியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

வடக்கு மற்றும் மலையக தொடரூந்துப் பாதைகளில் சேவையில் ஈடுபடுத்தவே இந்த தொடரூந்து இயந்திரங்கள், பெட்டிகளை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மலையக தொடரூந்துப் பாதைக்கு இந்திய தொடரூந்து இயந்திரங்கள் பொருத்தமற்றவை என்றும், சீன இயந்திரங்களே பொருத்தமானவை என்றும் அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

அதேவேளை வடக்கிற்கான பாதையில் இந்தியத் தொடரூந்து இயந்திரங்கள் பொருத்தமானவை என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதனால், அமைச்சரவையில், சீனாவிடம் கொள்வனவு செய்வதா இந்தியாவிடம் கொள்வனவு செய்வதா என்று குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்தே, ஆய்வுகளை மேற்கொள்ளும் வரை இந்தியாவிடம் இருந்து தொடரூந்து இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்படும் திட்டத்தை இடைநிறுத்தி வைக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை இந்தியாவின் டாடா மற்றும் அசோக் லேலன்ட் நிறுவனங்களிடம் இருந்து 500 பேரூந்து இயந்திரங்கள் மற்றும் 500 கியர் பெட்டிகளை வாங்கவும் அனுமதி கோரப்பட்டிருந்தது. இதுவும், தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.