இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய தலைவராக, அதன் முன்னாள் செயலாளரான அநுரக் தாக்கூர், ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் நேற்று இடம்பெற்ற விசேட பொதுக் குழுக் கூட்டத்திலேயே அவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 41 வயதான தாக்கூர், தலைவர் பதவிக்குத் தெரிவாகும் இரண்டாவது இளையவராவார்.
இப்பதவியில் அவர், செப்டெம்பர் 2017 வரை பதவி வகிப்பார். இதுவரை காலமும் தலைவராக இருந்த ஷஷாங் மனோகர், சர்வதேச கிரிக்கெட் சபையின் தவிசாளர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு ஒரு வாரம் முன்னதாக, தலைவர் பதவியிலிருந்து விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, தாக்கூர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
தலைவராகத் தெரிவான தாக்கூர், தானிருந் செயலாளர் பதவிக்கு, மஹாராஸ்திரா கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான அஜய் ஷேர்கேயை முன்மொழிந்தார்.
இதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பொருளாளராகப் பதவிவகித்த ஷேர்க்கே, ஐ.பி.எல் சம்பந்தமான விசாரணைகளில் சபை சிறப்பாகச் செயற்படவில்லை எனத் தெரிவித்து, 2013ஆம் ஆண்டு பதவியிலிருந்து விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.