இந்திய பிரஜை ஒருவர் இலங்கை விமான நிலையத்தில் அதிரடி கைது!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

சென்னைக்கு வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் (05-06-2022) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை தொழில் நிமித்தமாக இலங்கை வந்திருந்த 45 வயதான வர்த்தகர் ஆவார்.

கைதான  சந்தேக நபர் பயணிகள் முனையத்தில் உள்ள கழிவறைக்குள் பலமுறை சென்றுள்ளார்.

இதனையடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அவர் கொண்டு வந்த பயணப்பொதிகளுடன் கைது செய்துள்ளனர்.

அவரை சோதனையிட்டதில் 117,000 கனேடிய டொலர்கள் மற்றும் 19,000 யூரோக்கள் இருந்துள்ளது.

அவர் எடுத்துச் சென்ற வெளிநாட்டு நாணயங்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.