இந்திரா காந்தி LTTE இற்கு ஆதரவளித்தமை குறித்து கேபி’யால் அம்பலம்..

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உதவுமாறு, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, இந்திய உளவுப் பிரிவான றோவிடம் கூறினார் என்று, புலிகள் அமைப்பின் முன்னாள் சிரேஷ்ட தலைவரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

எல்.ரீ.ரீ.ஈயின் பிரதான சர்வதேச நிதி ஏற்பாட்டாளரும் ஆயுதங்களைக் கொண்டுவர உதவியவருமான அவர், விஒன் இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வியக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தைத் தொடர்ந்து, கே.பி , எல்.ரீ.ரீ.ஈயின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இவர், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பில் இந்தியாவால் தேடப்பட்டவர்.

பிரபலமாக இருந்த காலத்தில் தாய்லாந்தை மையமாகக் கொண்டு செயற்பட்ட கே.பி,தனது பெயரையும் வதிவிடத்தையும் மாற்றிக்கொண்டு மறைந்து வாழ்ந்து வந்தார்.

கே.பி, உலகளவில் தேடப்பட்டு வந்தவராவார். சி.ஐ.ஏயும் எம்.ஐ.எஸ் ஆகிய அமைப்புகளும் இவரைத் தேடிவந்தன.

எல்.ரீ.ரீ.ஈ இன் சர்வதேச சொத்துகள் பற்றி இவரிடம் முக்கிய தகவல்கள் உள்ளன என்று, கருதப்படுகிறது. ராஜீவ் காந்தி கொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, சிங்கப்பூரிலிருந்து கே.பியினால் அனுப்பப்பட்டதாக, இந்தியாவின் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர் கூறியிருந்தார்.

2009ஆம் ஆண்டு மலேஷியாவில் கைது செய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட குமரன் பத்மநாதனுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத்தடை விதித்ததும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)