இந்த வருடத்தில் இரண்டாவது பூரண சந்திர கிரகணம்…

பூரணை தினமான எதிர்வரும் 27 ஆம் திகதி, பூரண சந்திர கிரகணத்தை இலங்கையர்கள் பார்வையிடக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் ஏற்படப்போகும் இரண்டாவது பூரண சந்திர கிரகணம் இது என்பதுடன், கடந்த ஜனவரி மாதம் பூரண சந்திர கிரகணம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 27 ஆம் திகதி இந்த சந்திர கிரகணம் இலங்கை நேரப்படி இரவு 10.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், மறுநாள் அதிகாலை 4.58 மணி வரை அதனை பார்வையிட முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் இந்து சமுத்திரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெற்றுக் கண்களால் சாதகமான காலநிலை அதாவது தெளிவான வானம் இருந்தால் பூரணமாக பார்வையிடலாம் என நாசாவின் நிலவுத் துறை சார்ந்த விஞ்ஞானி நோவாஹ் பெட்ரோ என்பவர் உறுதிப் படுத்தியுள்ளார்.