தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் போது அதில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு உள்ளடக்கப்படாவிட்டால் அந்த தீர்வு முழுமையாகாது என அமைச்சர் நஸீர் அகமட் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய இராசமாணிக்கம் சாணக்கியன் எம்பி தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தார். அதனையடுத்து உரையாற்றுவதற்கு எழுந்த போதே அமைச்சர் நசீர் அஹமட் இவ்வாறு தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், நாம் நாட்டின் பொருளாதாரத்தை முறையாக முன்னெடுத்துச் செல்கின்றோம் என்பதை கடன் வழங்குபவர்களுக்கும் சர்வதேசத்திற்கும் அரசாங்கம் முறையாக தெளிவுபடுத்த வேண்டும்.
அதேவேளை அரசாங்கம் செலவினைக் குறைத்து வருமானத்தை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரசாங்கத்தின் பெருமளவு காணிகள் நாடளாவிய ரீதியில் காணப்படுகின்றன. அந்த காணிகளை மீளப் பெற்று அதனை முறையான குத்தகைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து துறைகளையும் டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். மக்கள் தமது சேவைகளை விரைவாகப் பெற்றுக் கொடுப்பதற்கு அது வழிவகுக்கும். சமூக பாதுகாப்பு முறைக்குள்ளே இவையும் உள்ளடக்கப்பட வேண்டும்.
வரி அறவீடு தொடர்பில் பல்வேறு முன்மொழிவுகள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் முதலீட்டாளர்களின் வருகை இதன் மூலம் அதிகரிக்கும். விமர்சனங்களை விடுத்து எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் செயல்படுவது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்