உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சில தினங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் தனது விஜயத்தை இரத்து செய்து நாடு திரும்பியதாகவும், நேற்றையதினம்(21) வெள்ளத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டி, வசட்டுவ, மீகொட கொலன்னாவ, வென்னவத்த, புத்கம, களனிபுர பிரதேசங்களுக்கும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட அகதிகளின் அவல நிலைகளை அறிந்து கொண்டாதாகவும் அவரது ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
வெல்லம்பிட்டி சந்தியிலிருந்து கடற்படையின் படகொன்றின் மூலம் மீகொட கொலன்னாவ, வென்னவத்த, கொடிகாவத்த, புத்கம, களனிபுர, ஆகிய பிரதேசங்களுக்கு அமைச்சர் றிசாத் சென்று பார்வையிட்டார்.
அவருடன் சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவர் ஹுஸைன் பைலா, மேல் மாகாண சபை உறுப்பினர் முஹம்மத் பாயிஸ், சதொச நிறுவனத் தலைவர் ரிஸ்வான், லக் சதொச தலைவர் ரொஹான்த, மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சுபைர்தீன், முபாரக் மௌலவி ஆகியோரும் இணைந்திருந்தனர்.
இந்தப்பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாத நிலையில் வீடுகளில் தங்கியிருக்கும் சுமார் 3500 பேரை பாதுகாப்பாக வெளியே எடுப்பது தொடர்பிலும் அமைச்சர் கவனம் செலுத்தினார்.
அநேக வீடுகளில் மக்கள் வெளியேறியதால் குறித்த வீடுகளில் இரவு நேரங்களில் களவுகள் இடம்பெறுவதாகவும் அவற்றை நிறுத்துவதற்கு உதவி செய்யுமாறும் நிவாரணப்பணியாளர்களும்
பொதுமக்களும் விடுத்த வேண்டுகோளை அடுத்து அமைச்சர், பொலிஸ் மா அதிபரிடம் தொடர்கு கொண்டு இரவு நேரங்களுல் பொலிஸாரை பாதுகாப்புக் கடைமையில் ஈடுபத்துமாறு வேண்டுகோளையும் விடுத்தார்.
நிவாரணப் பணியார்களுக்கு தமது நன்றிகளை வெளிப்படுத்திய அமைச்சர், மேற்கொண்டு நிவாரணம் வழங்க வேண்டியவர்களின் விபரங்களை உடன் தந்துதவுமாறும் கோரிக்கை விடுத்தார்.
நிலமை சீரடைந்து மக்கள் மீண்டும் இயல்பு வாழ்வை தொடங்கும் வரை இந்த மக்களுக்கு சமைத்த உணவுகள், உலர் உணவுகள் வழங்குவது தொடர்பிலும் கூடாரங்களில் இந்த மக்களை இருத்துவது தொடர்பிலும் தாம் கவனம் செலுத்தவுள்ளதாக அமைச்சர் தெரிவித்ததாகவும் அவரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

