(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்து மக்களும் இன, மத, கட்சி பேதம் இன்றி சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாக செயற்படுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடனான நேற்று(02) இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவுகின்ற தற்போதைய சூழ்நிலையில், சுகாதார துறைசார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளை பின்பற்றி செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது சுகாதார துறைசார்ந்தவர்களின் ஆலோசனைகள் மூலம் செயற்ப்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார அச்சுறுத்தல் நிலையில், சுகாதார துறையினர் விடுக்கும் அறிவிப்புகள் குறித்து அதிக அவதானம் செலுத்துமாறும் பிரதமர் பொதுமக்களிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.