பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கெப்டனான இம்ரான் கான், தெஹ்ரிக் இ இன்சாப் என்ற கட்சித் தலைவராக உள்ளார். கைபர் பகதுங்க்வா மாகாண தேர்தலில் இவரது கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அரசியல் நீங்கலாக பல்வேறு சமூகப் பணிகளையும் செய்து வரும் இம்ரான் கான், பாகிஸ்தானின் மிக பிரபலமான நபர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.
லாகூர் நகரில் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மிகப்பெரிய ஆஸ்பத்திரியை நடத்தி வருகிறார். இந்த ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களில் 75 சதவீதம் பேர் இலவச சிகிச்சை பெறுபவர்களாகவே உள்ளனர். ஒவ்வொரு நோயாளியின் சிகிச்சைக்காகவும் சுமார் 12 லட்சம் ரூபாய் செலவிடப்படுகின்றது.
இவ்வகையில், ஆண்டுதோறும் சுமார் 7 கோடி ரூபாய் செலவை சந்தித்து வரும் இந்த ஆஸ்பத்திரிக்கு தேவையான நிதியை பலர் அளிக்கும் ஸக்காத் (வசதி படைத்த முஸ்லிம்கள் ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் அளிக்கும் ஏழை வரி) மற்றும் நன்கொடைகள் மூலமாக இம்ரான் கான் திரட்டி வருகிறார்.
இதற்கிடையில், லாகூரில் உள்ளதைவிட மிகப்பெரிய இலவச புற்றுநோய் ஆஸ்பத்திரியை பெஷாவர் நகரில் அவர் கட்டி வருகிறார். வரும் ஜனவரி மாதம் இந்த ஆஸ்பத்திரியின் திறப்பு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த புதிய ஆஸ்பத்திரிக்கு நிதி திரட்டுவதற்காக நேற்று மாலை பெஷாவர் நகரில் மாபெரும் நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்ச்சியை இம்ரான் கான் நடத்தினார்.
இந்த விருந்தில் வசதி படைத்த தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் பலர் பங்கேற்றனர். இந்த விருந்தின் மூலம் 5 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்தது என செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், இதுபோன்ற நன்கொடைகள் மூலம் திரட்டப்படும் பணம் கட்டுமானப் பணிகளுக்கும் மற்றும் மருத்துவ சாதனங்கள் வாங்கவும் பயன்படுத்தப்படுகின்றது.
நோயாளிகளின் சிகிச்சைக்கு மட்டும் ஸக்காத் பணம் செலவிடப்படுகிறது. உலகிலேயே 75 சதவீதம் பேருக்கு இலவச சிகிச்சை அளிப்பது எங்கள் ஆஸ்பத்திரியாகதான் இருக்கும் என்றும் கூறினார்.