இம்ரான் கானின் படுக்கை அறையில் கெமரா வைத்த ஊழியர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பாகிஸ்தான் – தெரிக் – இ – இன்சாப் கட்சியின் தலைவரும் அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின்  இல்லத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், இம்ரான் கானின் படுக்கை அறையில்  உளவு பார்க்கும்  கருவியை பொருத்த முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம்  இம்ரான் கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அவர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்ப்பட்டார்.
இதையடுத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அமைக்கப்பட்ட ஆட்சியில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரிப் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டார்.
எனினும் தனது ஆட்சி அந்நிய சக்திகளின் சதியால் கவிழ்க்கப்பட்டது என தொடர்ந்து கூறி வரும் இம்ரான் கான், நாடு முழுவதும் மக்களை சந்தித்து கூட்டம் நடத்தி ஆதரவு திரட்டி வருவதோடு, போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் அண்மையில்  இம்ரான் கானை உளவு பார்க்க, அவரது படுக்கை அறையில் ஊழியர் ஒருவர் ரகசிய கெமரா ஒன்றைப் பொருத்த முயற்சி செய்ததாகவும், இதன் போது அவர் பாதுகாப்பு அதிகாரிகளால்  கையும் களவுமாகப்  பிடிபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ” இது மிகவும் ஆபத்தான போக்கு. இது போன்ற செயல்களை செய்வதை எனது எதிர் தரப்பினர் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என இம்ரான் கான் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.