இரட்டைக் குழந்தைகள் உருவாவது பற்றி நீங்கள் அறியாதவைஇவைகள் தான்…

சில பெண்களுக்கு பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறக்கும். அவ்வாறு பிறப்பதற்கான காரணங்கள் என்னவென்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

சின்ன வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அச்சு அசலாக ஒரே மாதிரி பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘Uniovular Twins’ என்று அழைக்கிறார்கள்.
பெலோப்பியன் குழாயில் இருக்கும் கரு முட்டையோடு, ஆணின் உயிரணு சேர்ந்து கருவான உடனே அந்தக் கரு எதிர்பாராத விதமாக இரண்டாக உடைந்து விடும். உடைந்த கருவின் இரண்டு பகுதிகளும் தனித்தனி கருவாக செல் பிரிந்து வளர்ந்து கொண்டு போய், ஒவ்வொன்றும் ஒவ்வொரு குழந்தையாக உருவெடுக்கிறது.

ஒரே கரு இரண்டாக உடைந்து உருவாவதால் இரட்டைக் குழந்தைகள் என்றாலும் நிறம், உயரம், ரத்த வகை என எல்லாமே ஒரே மாதிரியாகவே இருக்கும். இந்தக் கரு சில சமயம் இரண்டாக உடையும் போது சரியாக பிரியாமல், லேசாக ஒட்டிய படியே நின்று விடும். இப்படியாக ஒட்டிப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘Siamese Twins’ என்கிறார்கள்.

இன்னொரு வகையான இரட்டைப் பிறவியும் இருக்கிறது. அதில் ஒன்று ஆணாகவும், மற்றொன்று பெண்ணாகவும் பிறக்கும். ஒன்று சிவப்பாகவும், மற்றொன்று சம்பந்தமே இல்லாத அளவுக்கு கருப்பாகவும் பிறக்கும். இப்படி ஒன்றுக்கொன்று கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘Binovular Twins’ என்று அழைக்கிறார்கள். இரட்டையர்களை கணக்கெடுத்துப் பார்த்தால் ஒரே மாதிரியாக பிறக்கும் இரட்டையர்களை விட, சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டையர்களே உலகில் அதிகம்.

இந்த வகை இரட்டைக் குழந்தைகள் உருவாவதற்கு காரணம், பொதுவாக பெண்ணின் சினைப் பையில் ஒரு கரு முட்டை மட்டுமே வெடித்து வெளிவரும். சில சமயங்களில் வெகு அபூர்வமாக இரண்டு கரு முட்டைகள் வெடித்து வெளியே வரும். அவைகள் ஆணின் உயிரணுவோடு தனித்தனியாக சேர்ந்து இரண்டு கருவாகி ஒரே சமயத்தில் பிறப்பதுதான் வெவ்வேறு நிறம், வெவ்வேறு சாயலில் இருக்கும். அதைவிடுத்து கர்ப்பிணிப் பெண்கள் இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால், இரட்டைக் குழந்தை பிறக்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை.

இதெல்லாம் சரி, ஒரே பிரசவத்தில் நான்கு, ஐந்து குழந்தைகள் பிறக்கின்றனவே, இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், எல்லாமே நவீன மருந்துகள் தரும் விபரீதம் தான் என்கிறார்கள் மருத்துவர்கள். குழந்தை பிறப்புக்காக கருமுட்டையை வெடிக்கச் செய்யும் ஊசிகளை போடும்போது, ஒரு கருமுட்டைக்கு பதிலாக நான்கைந்து கருமுட்டைகளை வெடிக்கச் செய்து விடுகிறது. சில சமயங்களில் அந்த மருந்தின் வீரியம் ஒரே சமயத்தில் 7-க்கும் மேற்பட்ட முட்டைகளாகக் கூட வெடிக்கச் செய்து விடுகிறது.

(rizmira)