மியன்மாரில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் பௌத்த பேரினவாதத்தின் கொடூர நடவடிக்கை கண்டித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் இலங்கைக்கான மியன்மார் தூதுவருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கண்டனக் கடிதம் நேற்று காலை அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் உத்தியோகபூர்வ காரியாலயத்திலிருந்து மியன்மார் தூதுவருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“மியன்மாரில் உள்ள முஸ்லிம்களுக்கு நடக்கும் கொடுமைகளை எண்ணி இலங்கை வாழ் முஸ்லிம்கள் மிகுந்த மனவேதனையை அடைந்துள்ளனர். இலங்கையைப் போன்று மியன்மாரும் ஒரு பௌத்த நாடாகும். புத்த பெருமான் மற்றுமொரு சமுகத்தை கொடுமைப்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் அனுமதியை வழங்கியிருக்கவில்லை. இது விடயத்தில் மியன்மார் அரசு பௌத்த போதனையை பின்பற்றி உங்களது நாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு இனிமேலும் கடந்த கால துயரங்கள் இடம்பெறாமல் பாதுகாத்து சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என இலங்கை வாழ் முஸ்லிம்கள் சார்பாக கேட்டுக்கொள்வதாக”
குறித்த கடிதத்தில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் இன்று மியன்மார் முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் அடுத்தகட்டமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் பொருட்டு இலங்கையில் உள்ள பொதுநல முஸ்லிம் அமைப்புக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள் மற்றும் ஊடகவியலாளர்களை சந்தித்து ஆராய திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.