இரத்தினபுரி மாவட்டத்தில் மூளைக் காய்ச்சல் – வைத்தியர்கள் எச்சரிக்கை…

இரத்தினபுரி மாவட்டத்தில் மூளைக் காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதாக வைத்திய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுவரை 11 பேர் இந்நோய்க்கு உட்பட்டுள்ளதாகவும் பலாங்கொடை, கஹவத்தை, குருவிட்ட எலபாத்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இந்நோய்க்கு உள்ளாகியுள்ளதாகவும் இவர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் இரத்தினபுரி மாவட்ட வைத்திய அதிகாரி சம்பத் ரணவீர தெரிவித்தார்.

இந்நோய்க்கு உட்பட்டதாக சந்தேகிக்கப்படும் நோயாளர்களின் இரத்தம் இரத்தப் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு நோய் உறுதி செய்யப்படும் பட்சத்தில் இவர்களுக்கு விசேட வைத்திய பரிசோதனை நடத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார். இந்நோய் பன்றிகளாலேயே பரப்பப்படுவதனால் பன்றிப் பண்ணைகளுக்கு அண்மித்து வசிப்போர் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு தசாப்த காலத்துக்கு முன் இப்பகுதியில் பரவிய இந்நோயால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.