இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி குறைப்பு..

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்காக இதுவரை காலமும் விதிக்கப்பட்ட வரி அறவீடு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

வறட்சி காரணமாக அதிகரித்துள்ள அரிசியின் விலையால் அசௌகரியத்தை எதிர்நோக்கும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் நேற்று(06) நள்ளிரவு தொடக்கம் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் மீதான வரியை குறைத்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் அரிசி மீதான இறக்குமதி தீர்வை வரி 50 ரூபா, 15 சதவீத பெறுமதி சேர் வரி, 7.5 சதவீதமாக இருந்த துறைமுக மற்றும் வான் சேவைகள் வரி, 2 சதவீத தேசத்தை கட்டியெழுப்பும் வரி என்பவற்றை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்து ள்ளது.

இந்த வரிகளுக்கு பதிலாக இறக்குமதி செய்யப்படும் அரசி ஒரு கிலோகிராம் மீது 15 சதவீத குறைந்த பட்ச வரியை விசேட சந்தைப் பொருளுக்கான வரியாக அறவிட தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், விசேட வரிக்கு உட்படும் அரிசி வகைகளாவன, சம்பா, நாட்டரிசி, சிவப்பரிசி ஆகியனவாகும். பாஸ்மதி அரிசிக்கு குறித்த வரிசலுகை வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.