விரிவாக்கப்பட்ட நிதி உதவி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 3ம் கட்ட கடன் தொகையை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணயநிதியம் எதிர்வரும் டிசம்பர் மாதம் தீர்மானிக்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த கடன்திட்டத்தின் கீழ், 168 மில்லியன் டொலர்கள் படி இரண்டு கட்டக் கடன்வழங்கல்களை சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ளது.
இதன்படி இதன் மூன்றாம் கட்ட கடனாக மேலும் 168 மில்லியன் டொலர்களை வழங்குவது தொடர்பில், டிசம்பர் மாதம் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளது.
கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இலங்கைக்கு வந்திருந்த சர்வதேச நாணயநிதியத்தின் குழு ஒன்று, இலங்கை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன்படி விரிவாக்கப்பட்ட நிதி உதவி திட்டத்தின் அடிப்படையிலான வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்றல் மற்றும் புதிய உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தை அமுலாக்கல் ஆகியவற்றின் ஊடாக, புதிய கடன்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தின் அமுலாக்கத்தில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாகவே, மூன்றாம் கட்ட கடனான 168 மில்லியன் டொலர்கள் தாமதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது