இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலானது ஆசியாவுக்கும் உலகத்துக்கும் மிகவும் முக்கியமானதொன்றாகும் என்று அமெரிக்காவின் முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளரும் அமெரிக்காவின் முன்னாள் கடற்படை அட்மிரலுமான டென்னிஸ் கட்லர் பிளேயர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட பல சீர்திருத்தங்கள் தொடருமா இல்லையா என்பதை, ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் தீர்மானிக்கும் என்று மேலும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் மியன்மாரில் நடைபெறவுள்ள தேர்தல்களானது பிராந்தியத்துக்கும் உலகத்துக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இந்த இரண்டு அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான முக்கிய போக்குவரத்து மையங்களாக அபிவிருத்தி அடைந்து வருகின்றன.
இலங்கையில் இரண்டு தரப்பினர் கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ, கடந்த 10 வருடங்களாக இலங்கையின் ஜனாதிபதியாக இருந்தார். 2009ஆம் ஆண்டு இலங்கையில் நெடுங்காலமாக இருந்த கிளர்ச்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி அடக்குமுறையாக மாற்றப்பட்டதற்கு பிறகு, ஜனாதிபதித்தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய அமெரிக்க குடியரசு வரவேற்றிருந்தது.
எனவே, நாட்டின் எதிர்காலத்தை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலே தீர்மானிக்கும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(riz)