இலங்கையின் பொருளாதாரம் மேற்பார்வை ஸ்தீரமற்ற நிலையில் – சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் பொருளாதார மேற்பார்வை ஸ்தீரமற்ற நிலையில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பொருளாதார ஸ்தீரத்தன்மையானது எதிர்வரும் மாதங்களில் மேற்கொள்ளப்படும் பொருளாதார கொள்கைகளிலேயே தங்கியுள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

தனியார்துறையின் கடன்கள் 2015இல் அதிகரித்துள்ளன. இதனை தவிர, வெளிநாட்டு நாணய ஒதுக்கம், பொது நிதிகள், பொதுமக்களின் படுகடன் அதிகரிப்பு என்பன தொடர்பில் அவதானம் நிலவுவதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

எனவே இந்நிலைமைகளை போக்க இலங்கை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிதியம் கோரியுள்ளது.

இன்னும், பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்த, வரிக்கொள்கையில் மீளமைப்பு உட்பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இலங்கையின் வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகையின் நிலைமை வரவேற்கத்தக்க நிலையில் இல்லை. அத்துடன் அரசாங்கத்தின் வரி வருவாயில் 2011 ஆண்டின் பின்னர் குறைவு ஏற்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் வருமானம் மொத்த தேசிய உற்பத்தியில் 13.6 வீதமாக இருந்தது. எனினும் அது 2014ம் ஆண்டு 11.7 வீதமாக குறைந்துள்ளது.

இதில் வரிவருமானம் 2013ல் 11.6 வீதமாக இருந்தபோதும் 2014ம் ஆண்டு 10.7 வீதமாக குறைந்துள்ளது என்று சர்வதேச நாணயநிதியம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே மறைமுக வரி வருமானத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் நிதியம் வலியுறுத்தியுள்ளது.