இலங்கையில் மேலும் ஒரு தனியார் பல்கலைக்கழகம் நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் உள்நாட்டு மாணவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு மாணவர்களையும் கல்வி கற்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்க இருப்பதாக மலேசியா MDIS பல்கலைக்கழகத்தின் தலைவர் தியாகேந்திரன் தெரிவித்தார்.
கொழும்பு ஓசோ ஹோட்டலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார்.
இலங்கையில் இந்த பல்கலைக்கழகத்தை நிறுவுவதன் மூலம் நாட்டு மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மலேசியா MDIS பல்கலைக்கழகத்தின் கிளைகள் இந்தியா, மலேசியா, தாய்லாந்து, சீனா போன்ற நாடுகளில் இருப்பதாகவும், இதன் ஒரு கிளையே தற்போது இலங்கையில் ஆரம்பிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் கல்வி அமைச்சிடம் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும், விரைவில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் இதன்போது பல்கலைக்கழகத்தின் தலைவர் தியாகேந்திரன் தெரிவித்தார்.