இலங்கை அணிக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதா?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக இலங்கை அணிக்கு மேலதிக கொடுப்பனவுகள் எவையும்  வழங்கவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை அணிக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அதனை பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வசிம் கான் நிராகரித்துள்ளார்.

பாகிஸ்தானில் பாதுகாப்பு நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ளது எனவும் எதிர்காலத்தில் போட்டிகள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்கள் இன்றி பாகிஸ்தான் வரும் இலங்கை அணியை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை எனவும் பாகிஸ்தான் வரும் வீரர்கள் தங்களை நிரூபிக்கவேண்டிய நிலையில் உள்ளனர் எனவும் பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வசிம் கான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திமுத் கருணாரத்ன, லசித் மாலிங்க, குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் திக்வெல்ல, ஏஞ்சலோ மெத்தியூஸ், குசல் மெண்டிஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சுற்றுப்பயணத்தின் முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி கராச்சியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணியின் மீது கடந்த 2009ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர், முன்னணி டெஸ்ட் அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றன.

குறித்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தானில் எந்தவொரு சர்வதேச டெஸ்ட் தொடரும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.