இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வசீம் அக்ரம் வேகப்பந்து வீசும் நுட்பங்கள் தொடர்பிலான ஒருநாள் விஷேட பயிற்சிப் பயிற்சி பட்டறையொன்றை எதிர்வரும் 01 ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடாத்தவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
குறித்த பயிற்சியில் இலங்கை தேசிய அணியின் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, கொழும்பில் நாளை(01) இரவு இடம்பெறவுள்ள இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்விலும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வசீம் அக்ரம் கலந்து கொள்ளவுள்ளதாகவும் சபை அறிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால கூறியதாவது,
2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக்கிண்ண போட்டிக்காக இலங்கை அணியை தயார்படுத்தும் நோக்கிலேயே திட்டங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
அதன் அடிப்படையிலேயே நாம் வசீம் அக்ரமின் பந்துவீச்சு பயிற்சியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த பயிற்சிபட்டறையை முன்னெடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
வசீம் அக்ரம் பாகிஸ்தான் நாட்டுத் துடுப்பாட்டக்காரர். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர் பந்தை ஊசலாட்டுவதில் (swing) வல்லவர். இவர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடக் கூடியவர்.
ஒருநாள் போட்டிகளில் 500 விக்கெட்டுக்களை முதன்முதலில் வீழ்த்தியவர். இப்பொழுது தொலைக்காட்சி வர்ணனையாளராகப் பணிபுரிகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.