இலங்கை அணி வீரர்களுக்கு தயாசிறி சிவப்புச் சமிஞ்சை…

எதிர்வரும் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் போது அவர்களின் உடற்தகுதி பரிசோதிக்கப்பட்டு சிறந்த உடற்தகுதி உள்ளவர்கள் மாத்திரமே அணியில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று(21) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அமைச்சர் மேற்கண்டவாறுதெரிவித்திருந்தார்.

உடற்தகுதி பரிசோதனையில் சித்தி பெறாத வீரர்கள் எந்தளவு சிறந்த வீரராக இருந்தாலும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

மேலும், கடந்த 16ம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் தயாசிறி தெரிவிக்கையில்;

“..தற்போது அணியில் உள்ள வீரர்களுக்கு வயிறு அதிகம், அதனால் தான் பிடிகளை தவறவிடுகின்றனர்.. தான் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான கிரிக்கெட் அணி வீரர்களை கண்டதில்லை.. அசிங்கமாகவுள்ளது.. அவர்களை இராணுவ உடற் பயிற்சி நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும்..” எனவும் தெரிவித்து இலங்கை அணியினை சாடியிருந்தார்.

 

(rizmira)